கோவை – திருப்பூர் இடையிலான அரசுப் பேருந்தில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச்சீட்டை வழங்கிய பேருந்து நடத்துனருக்கு, திருப்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் வைத்தே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, சமீபத்தில் அரசு கொடுத்த தளர்வில் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில் சில கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு அரசு பேருந்து ஒன்று 57 பயணிகளுடன் வந்துள்ளது. பேருந்தில் , நடத்துனர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது , எச்சில் தொட்டு பயணச்சீட்டை கிழித்து வழங்கியுள்ளார்.
இதை பார்த்த பேருந்தில் பயணத்தவர்கள், ‘கொரோனா காலக்கட்டம் இதுபோல எச்சில் தொட்டு கொடுக்க வேண்டாம்’ என்று அவரிடம் கூறியுள்ளார்கள். அதனை பொருட்படுத்தாமல் நடத்துனர் மீண்டும் மீண்டும் அதேபோல் செய்ததாக கூறப்பட்டுகிறது. இதனால் பயணி ஒருவர் திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக பேருந்து திருப்பூர் வந்தடைவதற்கு முன்பாகவே பேருந்து வரும் வழியான மாவட்ட ஆட்சியர் அலுவக பேருந்து நிழற்கூடையருகே, கொரோனா பரிசோதனை செய்யும் நபர்களுடன் தயார் நிலையில் இருந்துள்ளனர்.
பேருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததும், அந்த நடத்துனருக்கு அந்த நிழற்குடையில் வைத்தே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த நடத்துனரிடம், ‘கொரோனா காலங்களில் நடத்துனர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்’ என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
- கவியரசன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்