Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘ஒற்றை ஆண் யானைகளே அதிகளவு வனத்திலிருந்து வெளியேறுகிறது’ - கோவை வனத்துறை ஆய்வில் தகவல்

ஒற்றை ஆண் யானைகளே உணவுக்காக அதிகளவு வனத்தை விட்டு வெளியேறுகிறது என்றும், பெண் யானைகள் தனித்து வனத்தை விட்டு வெளியேறுவதில்லை என்றும் கோவை வனத்துறையினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 8 மாதங்களில் கோவை மாவட்டத்தில் ‘உணவுக்காக’ வனத்தை விட்டு அதிகமாக ஒற்றை ஆண் யானைகள் வெளியேறி இருப்பதும், குறிப்பாக வடகிழக்கு பருவத்திற்கு பிறகு நிறைய யானைகள் வனத்தை விட்டு விவசாய நிலத்திற்குள் நுழைவதும் தெரியவந்துள்ளது.

image

கடந்த நவம்பர் 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 8 மாத காலகட்டத்தில், நாள்தோறும் எத்தனை யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பயிர்களை உட்கொள்கிறது மற்றும் எவ்வளவு மனிதர்கள்-யானைகள் மோதல் சம்பவம் நடக்கிறது என்பது தொடர்பாக எல்லையோர இரவு ரோந்து குழுவினர் (BORDER NIGHT PATROLLING TEAM ) ஆய்வு செய்தனர். அந்த ஆய்வுக்குழுவில் வனத்துறையினர் மட்டுமின்றி பழங்குடியினர், கிராம மக்கள் உள்ளடக்கிய பலர் இருந்தனர். அதன்முடிவில் கிடைத்த, ‘பயிர்களை நோக்கி வரும் யானைகள்’ குறித்த கடந்த 8 மாத கால ஆய்வறிக்கை கோவை மாவட்ட வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருக்கும் சில விவரங்கள்:

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் அதிகமாக 8 முறையும், இந்தாண்டு மார்ச் மாதம் குறைந்தபட்சம் 3 முறையும் வனத்தை விட்டு யானைகள் வெளியேறியுள்ளது.

கடந்த 8 மாதங்களில், ஒற்றையாக ஆண் யானைகள் 832 முறைகள் வனத்தை விட்டு வெளியேறியுள்ளது.

கூட்டமாக ஆண் யானைகள் 177 முறைகளும், பெண் யானைகள் கூட்டமாக 206 முறைகளும், குட்டிகளுடன் பெண் யானைகள் 82 முறைகளும், தனியாக பெண் யானைகள் 6 முறைகளும் வனத்தை விட்டு வெளியேறியிருக்கின்றன.

image

ஒற்றை ஆண் யானைகள் சுமார் 125 முதல் 134 வரை கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரி மாதங்களில் வனத்தை விட்டு வெளியேறியுள்ளன. இந்த எண்ணிக்கை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 88 லிருந்து 65 ஆக குறைந்து, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் 70லிருந்து 111 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், வடகிழக்கு பருவத்திற்கு பிறகு அதிக யானைகள் வனத்தை விட்டு விவசாய நிலத்திற்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது புற்கள், பயிர்கள் செழிப்பாகவும், ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உள்ளபோது யானைகள் வந்துள்ளன.

ஆண் யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலத்திற்கு வருவதற்கு, முக்கியமாக 3 காரணங்கள் உள்ளது. 

1. கூட்டத்திலிருந்து சண்டையிட்டுக்கொண்டு தனித்து வந்து தங்களுக்கு தேவையான உணவுக்காக தைரியமான போக்குடன் பயிர்களை நோக்கி வருவது (HABITUAL CROP RAIDING);

2. இடம்பெயர்வின் போது அருகில் பயிர்கள் இல்லாததால் வாய்ப்புக்காக வருவது (OPPORTUNISTIC CROP RAIDING); 

3. உடல்நல பாதிப்பாலோ குட்டிகளுடன் இருக்கும் பெண் யானைகளால் வெகுதூரம் உணவுக்காக செல்ல முடியாதபோது, உடனிருக்கும் ஆண் யானைகள் தனது குடும்பத்திற்காக பயிர்களை நோக்கி நகர்வது (OBLIGATORY CROP RAIDING) ஆகியவை.

ஆண் யானைகள் எத்தனை முறைகளில் வனத்தை விட்டு வெளியேறியுள்ளது: 

கடந்த டிசம்பரில் 35 முறைகளும், ஜனவரி மாதத்தில் அந்த எண்ணிக்கை குறைந்து 15 என்றும், பின் பிப்ரவரியில் அந்த எண்ணிக்கை இன்னும் குறைந்து 10 என்றும் ஆனது. தொடர்ந்து மார்ச்சில் 8 என்று அந்த எண்ணிக்கை குறைந்து, மீண்டும் ஏப்ரல் மாட்டாததில் 16 முறைகளாக அதிகரித்து, மே மாதத்தில் 51 ஆக அதிகரித்து, ஜூன் மாதத்தில் 18 ஆக குறைந்ததுள்ளது.image

பெண் யானைகள் எத்தனை முறைகளில் வனத்தை விட்டு வெளியேறியுள்ளது: 

பெண் யானைகளை பொறுத்தவரை, கடந்த நவம்பரில் 35 முறைகள் பெண் யானைகள் கூட்டம் வெளியேறியது. டிசம்பரில் இந்த எண்ணிக்கை 51 ஆக அதிகரித்து, மீண்டும் 19 ஆக ஜனவரி மாதத்தில் குறைந்தது. பின் 36 ஆக பிப்ரவரி மாதத்தில் அதிகரித்து, மார்ச்சில் 15 ஆக குறைந்தது. மே மற்றும் ஜூன் மாதங்களில் 24 முதல் 26 முறைகளில் வனத்தை விட்டு கூட்டமாக பெண் யானைகள் வெளியேறியுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது.

தவிர, குட்டிகளுடன் உள்ள பெண் யானை கடந்த நவம்பரில் 10 முறைகளிலும், டிசம்பர் மாதத்தில் 25 முறைகளும் வனத்தை விட்டு வெளியேறியுள்ளது. ஜனவரியில் இந்த எண்ணிக்கை 7 ஆக குறைந்து, பிப்ரவரியில் 17 ஆக அதிகரித்து, மீண்டும் மார்ச்சில் 5 ஆக குறைந்து, ஏப்ரலில் 10 ஆக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 6 முறைகள் குட்டிகளுடன் உள்ள பெண் யானைகள் வனத்தை விட்டு வெளியேறியுள்ளன. பின் ஜுனில் இது 2 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம், குட்டிகள் இருப்பதாலும் பாலூட்ட வேண்டியுள்ளதாலும் நீண்ட தொலைவு பயணிக்க முடியாததாலும், ஒரே இடத்தில் அதிகளவு உணவு கிடைக்கும் என்பதாலும் வேறு வழியின்றி கட்டாயமாக (OBLIGATORY CROP RAIDING ) பயிர்களை நோக்கி குட்டிகளுடன் உள்ள பெண் யானைகள் வருவது தெரியவந்துள்ளது.

ஒற்றை பெண் யானைகளை பொறுத்தவரை, மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வனத்தை விட்டு அவை வெளியேறியுள்ளது ஆய்வின் மூலம் அறியப்படுகிறது. கடந்த நவம்பரில் 3 முறைகளிலும், டிசம்பர், ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களில் ஒரு முறையும் வெளியேறியுள்ளது. இதன்மூலம், ஒற்றை பெண் யானை தனியாக பயணிப்பதில்லை என்றும், உடல்நலம் பாதிக்கப்பட்டு தன்னுடைய கூட்டத்தால் விரட்டப்பட்டால் மட்டுமே அவ்வாறு வருவதாக அறியப்படுகிறது.

image

இந்த ஆய்வின் மூலம், 63 % ஒற்றை ஆண் யானைகளும், 16 % மான கூட்டமாக பெண் யானைகளும், 14 % மான ஆண் யானை கூட்டங்களும், 6 % குட்டிகளுடன் உள்ள பெண் யானைகளும், 1 % மட்டுமே தனியாக வந்த பெண் யானைகளும் வனத்தை விட்டு வெளியேறி இருப்பதும் தெரியவந்துள்ளது.

கோவை வன சரகத்திற்குட்பட்ட பெரிய நாயக்கன்பாளையம் சரகத்தில் சுமார் 20 %, கோவை சரகத்தில் 18 %, 17 % சிறுமுகை வன சரகத்திலும், 14 % மேட்டுப்பாளையம் சரகத்திலும், 9 % காரமடை சரகத்திலும், 11 % போளுவாம்பட்டி வன சரகத்திலும், 3 % மதுக்கரை வன சரகத்திலும் பயிர்களை நோக்கி யானைகள் வருகிறது.

image

கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வனப்பாதுகாவலர்களான செந்தில்குமார், தினேஷ், உயிரியல் அலுவலர் நவீன் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பீட்டர் ஆகியோரால் இந்த ஆய்வு மேற்பார்வை செய்யப்பட்டு வருகிறது.

- ஐஸ்வர்யா | ஒளிப்பதிவாளர் தீபன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்